குறள் 841-850 புல்லறிவாண்மை

குறள் 841:.
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை 
இன்மையா வையா துலகு.

Tamil meaning
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. 

English meaning
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.

குறள் 842:.
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.

Tamil meaning
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும். 

English meaning
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth). 

குறள் 843:.
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது.

Tamil meaning
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள். 

English meaning
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes. 

குறள் 844:.
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு.

Tamil meaning
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். 

English meaning
What is called want of wisdom is the vanity which says, "We are wise". 

குறள் 845:.
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற 
வல்லதூஉம் ஐயம் தரும்.

Tamil meaning
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.

English meaning
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered. 

குறள் 846:.
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் 
குற்றம் மறையா வழி.

Tamil meaning
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். 

English meaning
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them). 

குறள் 847:.
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 
பெருமிறை தானே தனக்கு.

Tamil meaning
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.

English meaning
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself. 

குறள் 848:.
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.

Tamil meaning
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

English meaning
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).

குறள் 849:.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் 
கண்டானாம் தான்கண்ட வாறு.

Tamil meaning
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

English meaning
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit". 

குறள் 850:.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து 
அலகையா வைக்கப் படும்.

Tamil meaning
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் "பேய்" களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும். 

English meaning
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth. 

No comments:

Post a Comment