குறள் 1041-1050 நல்குரவு

குறள் 1041:.
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் 
இன்மையே இன்னா தது.

Tamil meaning
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

English meaning
 There is nothing that afflicts (one) like poverty.

குறள் 1042:.
இன்மை எனவொரு பாவி மறுமையும் 
இம்மையும் இன்றி வரும்.

Tamil meaning
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது. 

English meaning
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss). 

குறள் 1043:.
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக 
நல்குரவு என்னும் நசை.

Tamil meaning
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

English meaning
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech. 

குறள் 1044:.
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

Tamil meaning
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். 

English meaning
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words. 

குறள் 1045:.
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 
துன்பங்கள் சென்று படும்.

Tamil meaning
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். 

English meaning
The misery of poverty brings in its train many (more) miseries. 

குறள் 1046:.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் 
சொற்பொருள் சோர்வு படும்.

Tamil meaning
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும். 

English meaning
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

குறள் 1047:.
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும்.

Tamil meaning
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள். 

English meaning
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother. 

குறள் 1048:.
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் 
கொன்றது போலும் நிரப்பு.

Tamil meaning
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான். 

English meaning
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ? 

குறள் 1049:.
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 
யாதொன்றும் கண்பாடு அரிது.

Tamil meaning
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும், ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும். 

English meaning
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty. 

குறள் 1050:.
துப்புர வில்லார் துவரத் துறவாமை 
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Tamil meaning
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

English meaning
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.

No comments:

Post a Comment